தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான செலவுகளுக்காக மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மத்தியில் மாநகராட்சி நிர்வாகம் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, வருகிற 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பகுதிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என அறிவித்து, இதற்காக நான்கு மண்டலங்களுக்கும் அதிகாரிகளை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த அதிகாரிகளின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், தங்களது மண்டலங்களுக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்கள், ஏஜென்சிகள் மற்றும் மொத்த வியாபாரிகளை அணுகி, மரக்கன்றுகளுக்கு கூண்டு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்காக குறிப்பிட்ட தொகையை நிதியுதவியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக வியாபாரிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரக்கன்று நடும் விழா என்ற பெயரில் வியாபாரிகளிடம் அதிகாரிகள் பணம் வசூலிப்பதற்கு யார் அனுமதி அளித்தது? என வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
முன்னதாக மாநகராட்சி சார்பில் ஹைமாஸ் விளக்குகள் உள்ளிட்ட பணிகளுக்காக வியாபாரிகளிடம் நிதி பெறப்பட்டபோது, நிதியுதவி வழங்கியவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும், தற்போது மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக வசூலிக்கப்படும் தொகைக்கு உரிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த நான்கு ஆண்டுகளில் மாநகராட்சி பகுதிகளில் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது புதிதாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதும் கேள்வியை எழுப்பியுள்ளது.
மேலும், இந்த மரக்கன்று நடும் விழா தொடர்பான நிகழ்ச்சிகளில் அந்தந்த மண்டலத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மரக்கன்று நடும் திட்டத்திற்கு வியாபாரிகளிடம் கட்டாயமாகவோ, கெடுபிடியாகவோ பணம் வசூலிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற வசூலில் ஈடுபட்டதாக கூறப்படும் அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“மரக்கன்றுகள் நடுவது வரவேற்கத்தக்கது; ஆனால் அதற்காக வியாபாரிகளிடம் கட்டாய வசூல் செய்வது ஏன்?” என்பதே தற்போது வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.