ஒருபுறம் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு, மறுபுறம் ஒரே பகுதியில் கூடுதல் கடைகளை திறப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது
தூத்துக்குடி நகரின் பிரதான சாலைகளில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனடியாக அந்த கடைகளை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால், பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 63 கடைகள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சில கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலை மற்றும் குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில், கலைஞர் அரங்கம் அருகே ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைக்கு அருகில் புதிதாக மேலும் இரண்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஒருபுறம் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு, மறுபுறம் ஒரே பகுதியில் கூடுதல் கடைகளை திறப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், மது போதையால் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் புதிய கடைகள் திறப்பது சமூக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலையில் இந்த கடைகள் செயல்படுவதால், மது அருந்துவோரின் நடமாட்டம் அதிகரித்து, அப்பகுதி மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், முந்தைய திமுக ஆட்சியில் மது போதையுடன் தொடர்புடைய பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றதாகவும், தற்போது ஆட்சியில் உள்ள தமிழக வெற்றி கழக அரசும் அதே பாதையில் செல்வதாகவும் சித்ராங்கதன் விமர்சித்துள்ளார்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.