பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், வெறும் ரூ.2 கோடி மதிப்பில் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, மாநில அரசு சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த விவகாரத்தை 'கிளெரிக்கல் பிழை' எனக் கூறி அரசு தப்பிக்க முயல்வது ஏற்க முடியாது. தவறு நடந்துள்ளதாக அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளதால், இது மிகப்பெரிய ஊழல்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கோவில் நிலம் யார் பெயருக்கு மாற்றப்பட்டது, பத்திரப் பதிவு தொடர்பான முழு விவரங்கள் ஏன் வெளிப்படுத்தப்படவில்லை, இதற்குப் பின்னால் இருந்த 'Power Center' யார் என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முதலில் ஒரு சார்பதிவாளர் பத்திரப் பதிவை மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு புதிய அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகே பதிவு நடைபெற்றதாகக் கூறப்படும் சூழல் சந்தேகத்தை அதிகரிப்பதாகவும், இந்த முறைகேட்டின் உண்மையை வெளிக்கொணர மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரணை போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு தொடர்பான இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, முழுமையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.