சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவைக் விமர்சித்துப் பேசுகையில் கோத்ரா ரயில் கலவரம் நடந்து முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோது நீங்கள் என்ன குரல் கொடுத்தீர்கள்? முஸ்லிம்களின் உயிர் முக்கியம் என்று கூறி ஏன் ராஜினாமா செய்யவில்லை? இந்த வரலாற்றுப் பாவத்தை மறைக்க முடியாது என்று பேசியிருந்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு குறித்து பாஜக மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கட்சியின் அமைச்சர்கள் தொடர்ந்து முறையற்ற, முதிர்ச்சியற்ற மற்றும் சிறுபிள்ளைத்தனமான பேச்சுகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தாலும், அவர்கள் அரசியலுக்குப் புதிதாக வந்தவர்கள் என்பதாலும், அவர்களுக்குப் போதுமான அவகாசம் அளிக்கும் வகையிலும் இதுவரை நாங்கள் பொறுமை காத்து வந்தோம்.
ஆனால் நேற்று, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எந்தவிதத் தொடர்பும் இன்றி கோத்ரா கலவரம் குறித்துப் பேசி, திமுக-வைக் கடுமையாக விமர்சித்தார்.
“கோத்ரா கலவரம் நடந்தபோது முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நீங்கள் என்ன குரல் எழுப்பினீர்கள்? முஸ்லிம்களின் உயிர்கள் மட்டுமே முக்கியம் என்று கூறி ஏன் பதவி விலகவில்லை? இந்த பாவம், இந்த வரலாறு ஆகியவற்றை மறைக்க முடியாது என்று அவர் கூறினார்.
அவர் திமுக-வை விமர்சிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும், உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதும் வரலாற்றைத் திரித்துக் கூறுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
27 பிப்ரவரி 2002 அன்று கோத்ராவில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ‘S-6’ பெட்டியில் பயணம் செய்த 59 பேரை உயிருடன் எரித்துக் கொன்றது முஸ்லிம்களே ஆவர். அந்த 59 பேரும் இந்துக்கள். அயோத்தியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவர்களில் 27 பெண்களும் 10 குழந்தைகளும் அடங்குவர். இச்சம்பவத்தில் தண்டனை பெற்ற 33 குற்றவாளிகளும் முஸ்லிம்களே என்பதுதான் வரலாறு. மேலும், அந்தப் படுகொலை எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பதை நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா இதை உணர வேண்டும். வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல் பேசுவதும்,உளறுவதும் தவெகவின் வழக்கமாகிவிட்டாலும், அமைச்சரான பிறகு பொறுப்புடன் பேசுவதே முறையானது.
கோத்ரா விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்ததற்கும், மத அடிப்படையில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கியதற்கும், சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துவதற்காக இந்துக்களுக்கு எதிராகப் பேசியதற்கும், ஆதவ் அர்ஜுனா மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்.
இனிவரும் காலங்களில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது அமைச்சர்களை உண்மைகள், பொறுப்புணர்வு மற்றும் சரியான தரவுகளுடன் பேசும்படி அறிவுறுத்த வேண்டும். மேலும், தவறான தகவல்களைப் பதிவு செய்த ஆதவ் அர்ஜுனனைக் கண்டிப்பதோடு, அவையினுடைய பதிவேடுகளிலிருந்து அவரது தவறான கருத்துகளை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.